தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியாவின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு அல்லது புதிய இயக்குநர் நியமிக்கும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்(எய்ம்ஸ்) இயக்குநராக டாக்டர் ரன்தீப் குலேரியா கடந்த 2017 மார்ச் 28 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
மார்ச் 24 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு அல்லது புதிய இயக்குநர் நியமிக்கப்படும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் குலேரியா, நுரையீரல் மருத்துவம் மற்றும் தூக்கக் கோளாறுகள் துறையின் தலைவராகவும் உள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
மருத்துவத்துறையில் மிக உயர்ந்த விருதான டாக்டர் பிசி ராய் விருது 2014 ஆம் ஆண்டு குலேரியாவுக்கு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார்.