ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் முறையான ஜாமீன் வழங்கி இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு குறித்த விவரங்கள் பின்னர் விரிவாக வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, இருவருக்கும் 2019-இல் முன்ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் சாவு: ஓட்டுநர் கைது
கடந்த 2006-இல் மத்திய அமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.