2025-க்குள் 220 புதிய விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
"வரும் காலங்களில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மூலம் விமானிகளுக்கு உரிமம் வழங்குவது எளிமையாக்கப்படும். 33 புதிய உள்நாட்டு விமான நிலைய சரக்ககங்கள் உருவாக்கவும், விமானிகளுக்கு 15 புதிய விமானப் பயிற்சிப் பள்ளிகளையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிடுகிறது.
இவற்றுடன் 2025-க்குள் 220 புதிய விமான நிலையங்களை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்றார் அவர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 8-ம் தேதி கூட்டத் தொடர் நிறைவடைகிறது. முதல் பகுதி கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடைந்தது.