உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார்.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
இருப்பினும், மாநில பாஜகவுக்குள் முதல்வர் பதவிக்கு போட்டி நிலவியதால், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு மாநில முதல்வராக மீண்டும் புஷ்கர் சிங் தாமியை பாஜக தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, டேராடூனில் நடைபெற்ற விழாவில் புஷ்கர் சிங் தாமிக்கு, ஆளுநர் குர்மித் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.