சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டியிடம் உள்ளாடைகளை கழற்றி சோதனை...விமான நிலையத்தில் அதிர்ச்சி

ட்விட்டரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்துள்ளார்.
குவஹாத்தி விமான நிலையம்
குவஹாத்தி விமான நிலையம்

அஸ்ஸாமில் நேற்று குவஹாத்தி விமான நிலையத்தில் இடுப்பில் அறுவை சிகிச்சைக்குள்ளாகி சக்கர நாற்காலியில் வந்த பயணியிடம் ஆடையை கழற்றி சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலரை மத்திய தொழில் பாதுகாப்பு படை இடைநீக்கம் செய்துள்ளது.

லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் தனது பேத்தியுடன் வந்திருந்த மூதாட்டி, தில்லிக்கு செல்லவிருந்தார். நாடு முழுவதும் குவஹாத்தி உள்பட 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு அளித்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில், "பயணிகளின் பாதுகாப்பும் கண்ணியமும் ஒன்றுகொன்று தொடர்புடையவை. குவஹாத்தி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் தொடர்புடைய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் டிஐஜி பயணியிடம் பேசியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து அந்த மூதாட்டியின் பேத்தி டோலி கிகான் ட்விட்டரில், "குவஹாத்தி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சோதனையின்போது எனது 80 வயது மாற்றுத்திறனாளி அம்மாவின் ஆடைகளை அகற்றினர். அவரது இடுப்பில் டைட்டானியம் பொருத்தப்பட்டதற்கு ஆதாரம் கேட்டு அவரின் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தினர்.

இது அருவருப்பானது. எனது 80 வயது மாற்றுத்திறனாளி அம்மா அவரது உள்ளாடையை கழற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். ஏன்? ஏன்?" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய பாதுகாப்பு படையின் மூத்த அலுவலர், "அந்த நபரின் உடலில் உலோகம் இருப்பதைக் குறிக்கும் வகையில் டிடெக்டர் சத்தம் போட்டது. இதன் காரணமாக, ஆடையை கீழே இழுத்து காண்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் சொன்னார்கள். விதிகளின்படி, பணியில் இருக்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அத்தகைய சூழ்நிலைகளில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையையே பின்பற்றியுள்ளனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com