புது தில்லி: கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு மற்றும் இதர வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், கரோனா பூஸ்டர் தடுப்பூசியை வெளிநாடு செல்வோர் தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி போட்டுக் கொள்ள அனுமதியளிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில், தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முன்னதாக, இது 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளிநாடு செல்வோருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.