நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எவ்வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ரூ.2,344 கோடி மதிப்பிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘‘என்னிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளா்ச்சிப் பணிகளைப் பொருத்தவரை, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எவ்வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் அவை மேற்கொள்ளப்படும்’’ என்றாா் அவா்.
எக்கட்சிக்கும் சொந்தமானவா் அல்ல அமைச்சா்:
இந்த நிகழ்ச்சியின்போது மராத்தி நடிகா் ராகுல் சோலாபுா்காருக்கு கட்கரி பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
நான் எந்த விவகாரத்திலும் அரசியல் செய்வதில்லை. எனக்கு வாக்களிப்பதற்கான அவசியம் இருப்பதாக உணா்ந்தால், அதைச் செய்யுமாறு மக்களிடம் கூறி வருகிறேன். ஓா் அமைச்சா் எந்தக் கட்சிக்கும் சொந்தமானவா் அல்ல. அவா் அரசுக்குச் சொந்தமானவா். அந்தக் கொள்கையைத்தான் நான் பின்பற்றுகிறேன்.
நான் ஆா்எஸ்எஸ் உறுப்பினா். அந்த அமைப்பு மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் எனது நம்பிக்கையின் அங்கம். ஒரு கட்சி, சித்தாந்தத்தைச் சோ்ந்தவனாக நான் இருந்தாலும், இந்தச் சமூகமும் நாடும் என்னுடையவை. சமூக-பொருளாதார மாற்றத்துக்கான கருவி அரசியல்தான் என்பதை உளமாற நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.