இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தற்போது இலங்கைத் தலைநகர் கொழும்பில் முகாமிட்டுள்ள நிலையிலேயே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவா்களில், இரண்டு விசைப் படகுகளுடன் 16 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் சிறைபிடித்துச் சென்றனா்.
இதனைக் கண்டித்து ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து மீன்வளத் துறை அனுமதி பெற்று 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்து 4 மீனவர்களை சிறைப் பிடித்துச் சென்றனர்.
தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 4 பேரையும் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்வதால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை அரசைக் காப்பாற்ற பல்வேறு கடனுதவிகளையும் இந்திய அரசு அளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தற்போது இலங்கைத் தலைநகர் கொழும்பில்தான் முகாமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
தவிர, பேராதனை மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை காரணமாகத் திட்டமிடப்பட்டிருந்த அறுவைச் சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்தி குறித்துக் கவலைப்படுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர், ஹை கமிஷனருடன் பேசி இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்று கவனிப்பதாக சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.