எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. டி.என். பிரதாபன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
நாட்டில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே லிட்டருக்கு 80 பைசா மற்றும் 70 பைசா அதிகரித்துள்ளது. கடந்த 8 நாள்களில் கிட்டத்தட்ட லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வினால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. டி.என். பிரதாபன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.
'எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எதிர்பார்த்தபடியே ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. இது ஏழைக் குடும்பங்களை மிகவும் மோசமாக பாதிக்கிறது.
இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு இதனை சரிசெய்யவில்லை என்றால் இலங்கையின் தற்போதைய நிலையில் இந்தியா காலடி எடுத்து வைக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.