ஊடகங்களில் தேவையற்ற அறிக்கைகளை அளித்ததற்காக உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அக்கீல் அகமது கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஏற்கெனவே இருந்த பஞ்சாபையும் இழந்தது. இதையடுத்து கட்சியின் சார்பில் சில ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரகண்ட் பேரவைத் தேர்தலின்போது ஊடகங்களில் தேவையற்ற அறிக்கைகளை அளித்ததற்காக உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அக்கீல் அகமதுவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
பேரவைத் தேர்தலின்போது மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றும் அவரின் தற்செயலான அறிக்கைகள் காரணமாக மக்களுக்கு கட்சி மீதான பார்வை மாறியுள்ளது என்றும் கூறியுள்ள காங்கிரஸ், ஒழுங்கு நடவடிக்கையின்படி ஆறு ஆண்டுகளுக்கு கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அகமது பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
70 இடங்களைக் கொண்ட உத்தரகண்ட் மாநில பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.