கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என மாநில அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தற்போது பள்ளிகளில் பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று மாநில பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பலரும் தேர்வு எழுதச் செல்லவில்லை. உடுப்பியில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதித்த விவகாரத்தில் 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கதக் மாவட்டத்தில் இரு பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் மாற்றம் இரண்டு தேர்வு கண்காணிப்பாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.