வேளாண் பயிா்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்கும் நடைமுறையை மேலும் திறம்பட மேற்கொள்வதற்காக ஒரு குழுவை அமைக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு நவம்பரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா். அதில், நாட்டில் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப அறுவடை நடைமுறையிலும் மாற்றம் அவசியமாகிறது. வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் நடைமுறையை மேலும் திறம்பட மேற்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஒரு குழுவை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று தோமா் தெரிவித்தாா்.
முன்னதாக, மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து கடந்த பிப்ரவரியில் பேசிய தோமா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இக்குழுவில் மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார வல்லுநா்கள் ஆகியோா் இடம்பெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.