மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஓலா நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனம் தானாகவே தீப்பற்றி எரிந்து விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, புணேயில் கடந்த சனிக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவன தயாரிப்பு மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றியது. இதில் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இரு சக்கர வாகனம் தானாகவே திடீரென தீப்பற்றி எரிந்த காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது பல வகைகளில் நன்மையளிக்கும் என்பதால் அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மின்சார வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது மக்கள் மத்தியில் அந்த வகை வாகனங்கள் குறித்த அச்சவுணர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்துக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், புணேயில் மின்சார இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்குமாறும் கூறியுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக விளக்கமளித்த ஓலா நிறுவன இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவீஸ் அகர்வால், "வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது. அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணப்படும்' என்றார்.