புது தில்லி: நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இரண்டாவது வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதமும், இதுபோல அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா, வடகிழக்கு இந்திய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இதர பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையை விட இயல்பானது முதல் குறைந்த அளவில் பதிவாகும் என்றும், வடமேற்கு, மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் அல்லது இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இரண்டு வெப்ப அலைகள் உருவானது, ஒன்று மார்ச் 11 - 21 வரையிலும், மற்றொன்று மார்ச் 26ல் தொடங்கி தற்போது வரை வீசி வருகிறது.