ஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்தார்.
வருகிற ஜூலை மாதத்துக்குள் மாநிலங்களவையில் உள்ள 72 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, ஓய்வுபெற உள்ள 72 எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் எம்.பி.க்களில் மூன்று மற்றும் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அடங்குவர். இந்த நாடாளுமன்றத்தில் நாம் நீண்ட காலம் செலவிட்டுள்ளோம். இந்த சபையும் எங்களுக்கு நிறைய பங்களித்துள்ளது.
உண்மையில், நாங்கள் பங்களித்ததைவிட இந்த சபை எங்களுக்கு அதிகம் வழங்கியுள்ளது. ஓய்வுபெறும் எம்.பி.க்கள் தங்களின் அனுபவங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வர வேண்டும்.
கல்வி அறிவைவிட அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனுபவங்கள் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன. மேலும், புதியவற்றின் தவறுகள் குறைக்கப்படுகின்றன. எனவே, எம்.பி.க்கள் தங்களின் செழுமையான அனுபவங்களை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்
அதிக அனுபவமுள்ள எம்.பி.க்கள் வெளியேறும்போது, இந்த சபையில் இயல்பாகவே இழப்பு ஏற்படுகிறது. அவர்கள் மீண்டும் வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
பின்னர் ஓய்வு பெறும் 72 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் பிரபு, ஏ.கே. ஆண்டனி, நியமன உறுப்பினர்களான ஸ்வபன் தாஸ்குபா, ரூபா கங்குலி உள்ளிட்டோர் அடுத்த சில வாரங்களில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 13 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் இன்று 6 மாநிலங்களில் நடைபெறுகிறது.