கரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்வாகி கரோனா பாதிப்பால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதில், யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டால், இதேபோன்று நாட்டில் நடைபெறும் இதர தேர்வுகளுக்கும் மறுவாய்ப்பு கோரிக்கை எழும் என்றும் எனவே அவ்வாறு வாய்ப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.