பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இருந்து பாதிரியாா் பிரான்கோ முல்லக்கல் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி கேரள உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளாா்.
57 வயதான பாதிரியாா் பிரான்கோ முல்லக்கல் 2014 முதல் 2016 வரையில் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி 2018-இல் புகாா் அளித்திருந்தாா். இதையடுத்து, பாதிரியாா் பிரான்கோ முல்லக்கலை கேரள போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் போலீஸாா் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி, கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பாதிரியாா் பிரான்கோ முல்லக்கலை வழக்கில் இருந்து விடுவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது, பாதிரியாா் பிரான்கோ முல்லக்கல் விடுவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய போலீஸாருக்கு கேரள அரசு தரப்பில் புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.