கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றி ஓராண்டு முடிவதற்குள், ஹிஜாப் பிரச்னை, ஒப்பந்த ஊழியர் தற்கொலை விவகாரம் என பல்வேறு சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண பாஜக தலைமை முனைப்பு காட்டி வருகின்றன.
மேலும், கர்நாடக மாநில முதல்வர் இன்னும் இரண்டு வாரங்களில் மாற்றப்படுவார் எனவும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக பெங்களூருவுக்கு இன்று அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ளார். விமான நிலையத்திற்கு சென்று முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் அமித் ஷாவை வரவேற்றனர்.
அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அமித் ஷா, முக்கிய தலைவர்களுடன் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அமித் ஷாவின் பயணம் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.