பெங்களூருவில் நாட்கிரிட் நிறுவனத்தை திறந்து வைக்கிறார் அமித்ஷா
பெங்களூருவில் உள்ள நாட்கிரிட் நிறுவனத்தையும், கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தையும் இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள தென் மாநிலத்திற்கான ஒருநாள் பயணமாக திங்கள்கிழமை மாலை பெங்களூரு வந்தார் அமித்ஷா.
பசவ ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ பசவண்ணாவுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவர் நிருபதுங்கா பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பெல்லாரியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும், மாலை 5.30 மணிக்கு, பெங்களூருவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்கிறார்.
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் அவர் பாஜக தலைவர்களையும் இன்று சந்திக்கவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அமித் ஷாவின் பயணம் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.