தடுப்பூசி போடாத 12 முதல் 18 வயது வரையிலான மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு சண்டிகர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சண்டிகர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்விநிலையங்களில் 12 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மே 15ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் அதாவது 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மாநில சுகாதாரத் துறையுடன் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சண்டிகர் அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சண்டிகரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. நாள்தோறும் 10 - 15 வரையிலான நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.