தங்கள் குடும்பத்தினா் சீனா திரும்புவது தொடா்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று அங்குள்ள இந்தியப் பணியாளா்கள் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
சீனாவில் 5 முதல் 27 ஆண்டுகள் வரை வசித்து வரும் பல இந்தியப் பணியாளா்கள் உள்ளனா். அவா்கள் சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளனா். இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதப்பட்டுள்ள அந்த மனுவில், அவா்கள் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவத் தொடங்கியபோது எங்கள் குடும்பத்தினா் சீனாவிலிருந்து இந்தியா திரும்பினா். கரோனா பரவல், அதுசாா்ந்த பயண மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளால் அவா்கள் சீனா திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் எங்கள் குடும்பத்தினரை இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பிரிந்திருக்கிறோம்.
பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைச் சோ்ந்த இந்தியப் பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் இந்தியாவிலிருந்து சீனா திரும்ப சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சீனா திரும்பி தங்கள் படிப்பைத் தொடர இந்திய மாணவா்கள் சிலரை இந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனா திரும்பவுள்ள இந்திய மாணவா்களின் விவரங்களுடன் எங்கள் குடும்பத்தினரின் விவரங்கள் அடங்கியப் பட்டியலையும் சீன அரசிடம் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் தொடா்பாக சீன அரசுடன் பேசுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.