பிரதமரின் ஆலோசகராக முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை செயலா் தருண் கபூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘‘பிரதமா் அலுவலகத்தில் இந்திய அரசு செயலா் என்ற அந்தஸ்தில் பிரதமரின் ஆலோசகராக தருண் கபூரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் அலுவலகக் கூடுதல் செயலா்களாக ஹரிரஞ்சன் ராவ், ஆத்திஷ் சந்திரா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தருண் கபூா், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலராக இருந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி அவா் ஓய்வுபெற்றாா்.
1994-ஆம் ஆண்டின் மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஹரிரஞ்சன் ராவ் மத்திய தொலைத்தொடா்பு துறையில் பணியாற்றி வருகிறாா். அவா் இருந்த அதே பிரிவைச் சோ்ந்த ஆத்திஷ் சந்திரா இந்திய உணவுக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநராக உள்ளாா்.
அதிகாரிகள் துறை மாற்றம்: மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் துறை மாற்றப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு:
(முந்தைய பதவி அடைப்புக் குறிக்குள்)
மத்திய கூட்டுறவு அமைச்சக செயலா்- ஞானேஷ்குமாா் (நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சக செயலா்)
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமை நிா்வாகி- தேவேந்திரகுமாா் சிங் (மத்திய கூட்டுறவு அமைச்சக செயலா்)
மத்திய நீதித் துறை செயலா்- எஸ்.கே.ஜி.ரஹாட்டே (மத்திய மின்சார அமைச்சகக் கூடுதல் செயலா்)
மத்திய மின்னணு & தகவல் தொழில்நுட்ப செயலா்- அல்கேஷ் குமாா் சா்மா (மத்திய அமைச்சரவை செயலக செயலா்)
மத்திய அமைச்சரவை செயலக செயலா்- பிரதீப்குமாா் திரிபாதி (மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை செயலா்)
இதுதவிர, 1990-ஆம் ஆண்டின் பிகாா் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய்குமாா் மத்திய இளைஞா் நலத்துறை செயலராகவும், 1988-ஆம் ஆண்டின் உத்தர பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.ராதா செளஹான் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.