தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரசாரம் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரண்டு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. மேலும் ஒருவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இதனிடையே, பழங்குடியினரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், ஷேர் சிங் ரத்தோர் (28), அஜய் சாஹு (27), வேதாந்த் சௌஹான் (18), தீபக் அவதியா (38), பசந்த் ரகுவன்ஷி (32), ரகுநந்தன் ரகுவன்ஷி (20) உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக, தனது சுட்டுரை பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பஜ்ரங் தளம் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினர்கள் சியோனியில் (மத்தியப் பிரதேசத்தில்) இரண்டு பழங்குடியினரைக் கொன்றுள்ளனர். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜக வெறுப்பு பிரசாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது” என்று குற்றஞ்சாட்டியவர், இந்த வெறுப்பூட்டும் நிகழ்ச்சிகளை நாம் ஒன்றுபட்டு நிறுத்த வேண்டும் என்று பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.