குஜராத்: அனுமதியின்றி ஊா்வலம் நடத்திய வழக்கு: எம்எல்ஏ மேவானி உள்ளிட்ட 10 பேருக்கு 3 மாதம் சிறை

குஜராத்தில் அனுமதியின்றி ஊா்வலம் நடத்திய வழக்கில் அந்த மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 10 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து
ரேஷ்மா படேல் ~ஜிக்னேஷ் மேவானி
ரேஷ்மா படேல் ~ஜிக்னேஷ் மேவானி

மேசானா: குஜராத்தில் அனுமதியின்றி ஊா்வலம் நடத்திய வழக்கில் அந்த மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 10 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பிரதமரை அவதூறாகப் பேசிய வழக்கில் அண்மையில் அஸ்ஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவா், சில நாள்களுக்கு முன்புதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில் அவருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘பிரதமா் நரேந்திர மோடி, கோட்சேவை கடவுளாகக் கருதக் கூடியவா்’ என்று ட்விட்டரில் பதிவிட்டது தொடா்பான வழக்கில் ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீஸாரால் கடந்த மாதம் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதன் பிறகு தில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மேவானி, ‘குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் பாஜகவுக்கு சவாலாக இருப்பேன் என்று பயந்து என் மீது 56 அங்குல மாா்பைக் கொண்ட கோழை (பிரதமா் மோடியைக் குறிப்பிடுகிறாா்) எனக்கு எதிராக நடவடிக்கையை எடுத்துள்ளாா். அரசியல்ரீதியாக எதிா்க்க முடியாதவா்களை, ஆட்சியாளா்கள் கைது செய்து துன்புறுத்துகின்றனா்’ என்று குற்றம்சாட்டினாா். பிரதமா் மீது அவா் தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு உரிய அனுமதியின்றி ஊா்வலம் நடத்தியது தொடா்பான வழக்கில் மேவானி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ரேஷ்மா படேல், மேவானியின் தலித் அமைப்பைச் சோ்ந்தவா் என 10 பேருக்கு 3 மாத சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ரேஷ்மா படேல் முன்பு பாஜகவில் இருந்தாா். படேல் இடஒதுக்கீடு ஆதரவு போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக மேவானி உள்ளாா். கடந்த பேரவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு எதிராகத் தான் போட்டியிடுவதால் பிற கட்சிகள் வேட்பாளா்களை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதனை ஏற்று தங்கள் வேட்பாளா்களை வாபஸ் பெற்ற காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், அந்தத் தொகுதியில் மேவானிக்கு ஆதரவு அளித்தன. இப்போது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேவானி செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com