சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.50 உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் மே 8 முதல் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு நாட்டு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு எனும் பெயரில் பெரும் கொள்ளை நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக கடந்த 2 மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.