கடந்த 30 ஆண்டுகளில், பிகாரில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை என தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய தேஜஸ்வி, "பிரசாந்த் கிஷோரின் இந்தக் கூற்று, பதில் சொல்லத் தகுதியற்றது. இதற்கு ஆதரம் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. யார் அவர்? இதுவரை எதிலும், அவர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படத்தவில்லை" என்றார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நிதிஷ் குமார் அளித்த பதிலை விமரிசித்து பேசிய அவர், "அவரது கட்சி நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது, எனவே இந்த விஷயத்தில் அவரது அறிக்கைகள் எல்லாம் பொருட்டே அல்ல" என்றார்.
பெருந்தொற்று முடிந்தவுடன் குடியிரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய நிதிஷ் குமார், "இந்த சட்டம் கொள்கை விஷயம் சார்ந்தது. கோவிட் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் மாநில அரசு அதிக அக்கறை கொண்டிருந்தது" என்றார்.
நிதிஷ் குமாரின் இந்த கருத்தை சாடிய தேஜஸ்வி, "குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதை நாங்கள் எப்பொழுதும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வருகிறோம்.
பிகாரில் இது விரைவில் அமல்படுத்தப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் மசோதாவை ஆதரித்தது. இந்த மசோதாவுக்கு எதிராக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், ஒவ்வொரு கட்சியும் இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைத்தன" என்றார்.