புதுதில்லி: தமிழக கடலோர பகுதிகளை கண்காணிக்க தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தலைநகா் கொழும்பில் அதிபா் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இதையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளா்கள் மீது போராட்டக்காரா்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் தேச விரோத கும்பல்களும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழக கடலோர பகுதிகளை கண்காணிக்குமாறு தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.