கரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் இன்று தொடங்கியது.
பல்கலையில் இன்று காலை நடைபெற்ற 40 தாள்களுக்கான தேர்வில் 29,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதியதாக பல்கலைக்கழக தேர்வு தலைவர் டி.எஸ்.ராவத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பல்கலைக்கழகம் நேரடி தேர்வுகளை நடத்துகிறது. எனவே, இதற்காக முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளங்கலை மாணவர்களின் தேர்வுகள் ஒரு நாளில் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகின்றன.
தில்லி பல்கலையில் திறந்தவழி கற்றலின் மூலமாக பயிலும் மாணவர்களுக்கு, இன்று மூன்று தாள்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.
கரோனா நெறிமுறைகள் பின்பறறப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் கை சுத்தத் திரவம் மற்றும் தண்ணீர் பாட்டில், முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.