தில்லியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியும் , குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும். இது இயல்பை விட மூன்று புள்ளிகள் அதிகமாகும்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தில்லியில் புதிய வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தேசிய தலைநகரில் நிலவும் கிழக்குக் காற்று நகரத்தை வெப்பத்தில் இருந்து பாதுகாத்தது.
தில்லியில் மீண்டும் வெப்ப அலையானது வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
ஸ்கைமெட் தனியாா் வானிலை ஆய்வு மைய துணைத் தலைவா் மகேஷ் பலாவட் கூறுகையில்,
வங்கக் கடலில் அசானி புயல் தாக்கத்தின்கீழ் பிராந்தியத்தில் கிழக்கத்திய காற்று வீசும் என்பதால் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்காது என்றபோதிலும், காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படும் என்றாா் அவா்.
கடந்த வாரம் கடுமையான வெப்ப அலை வீசிய நிலையில், அதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சற்று தணிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.