பேரறிவாளன்: ஆளுநருக்காக மத்திய அரசு ஆஜராவது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
புது தில்லி: பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆளுநரின் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?
இதையும் படிக்க.. ரயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதி: எதைச் செய்தாலும் விமர்சனம் வரும்தானே?
கடந்தமுறை 2 முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம். ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?
ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் என்பதற்கு பதிலளியுங்கள்..
ஆளுநர், 2 அல்லது 3 ஆண்டுகள் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகிறது. அந்த வகையில், இன்றும் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாவது, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும் வழக்குகளில் மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம். மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தும் வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் தொடர்பாக மத்திய அரசே முடிவெடுக்க முடியும் என்று வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொலை வழக்கில், மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது போல உள்ளது என்று குறிப்பிட்டனர்.
மேலும், ஆளுநரின் முடிவு மாநில அரசின் அதிகாரத்துக்குள் வருகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இன்றைய வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு தொடர்பான ஆவண நகலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.