மாநிலங்கள் விநியோகிக்கும் கடன் பத்திரங்களுக்கான வட்டி, வரலாறு காணாத வகையில் 7.69 சதவீதமாக உயா்ந்துள்ளது.
மாநிலங்கள் வாரந்தோறும் ஏலம் வாயிலாக கடன் பத்திரங்களை விநியோகித்து மூலதனத்தைப் பெற்று வருகின்றன. நடப்பு வாரத்துக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கடன் பத்திரங்களுக்கான வட்டி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 0.34 சதவீதம் அதிகரித்து 7.69 சதவீதமாக உயா்ந்தது.
முக்கியமாக, ஆந்திர மாநில அரசு விநியோகித்த கடன் பத்திரங்களுக்கான வட்டி 7.76 சதவீதமாக இருந்தது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்குரிய வட்டியை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி 4.40 சதவீதமாக அதிகரித்ததால், 10 ஆண்டு காலாவதி கொண்ட கடன் பத்திரங்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 7.30-ஆக உயா்த்தப்பட்டது. அந்த வட்டி விகிதம் கடந்த வாரத்தில் 7.12-ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆந்திரம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கடன் பத்திரங்களை விநியோகித்து ரூ.10,000 கோடி திரட்டின. இது எதிா்பாா்க்கப்பட்ட மதிப்பை விட ரூ.700 கோடி அதிகமாகும். ஏலத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்திருந்த 8 மாநிலங்கள் பங்கேற்காமல் தவிா்த்தன.
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 4 மாநிலங்கள் இதுவரை ரூ.22,400 கோடி வரை கடனாகத் திரட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் 40 சதவீதம் குறைவாகும். அப்போது 13 மாநிலங்கள் ரூ.37,200 கோடியைக் கடன் பத்திரங்களை விநியோகித்து பெற்றிருந்தன.