மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
காயங்கள் மற்றும் அதிக அளவு ரத்தப்போக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் 12 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார்.
சிறுமியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரது தந்தை குடும்ப வறுமைக்காக வெளியூரில் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அண்டை வீட்டைச் சேர்ந்த 25 வயது நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அவரது தாயாரும் மருத்துவமனையில் இருந்ததால், சிறுமியை நீண்ட நேரம் கழித்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய சிறுமியின் தாயார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதற்கு கண்டித்தேன். அதனை மனதில் வைத்து என் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளதாக குறிப்பிட்டார். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். காவல் துறையினர் 25 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.