விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், திருமண வைபவத்தின் போது, தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மயங்கி மணமகன் மீது விழுந்து பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
மணமேடையில், மணமக்களுக்கு, ஐயர் வேதங்கள் முழங்க, தாலி கட்டும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. மணமகன் வெல்லக் கட்டியை எடுத்து மணமகள் தலையில் வைக்கவும், மணமகள் மயங்கி சரியவும் சரியாக இருந்தது.
இதையும் படிக்க.. குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய காத்திருப்பவரா? அருமையான வாய்ப்பு
உடனடியாக உறவினர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மணமகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமையன்று மதுரவாடா பகுதியில் நடந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மணமகள் ஸ்ருஜானாவின் (22) பெற்றோர் இதுபற்றி கூறுகையில், மகள் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், ஸ்ருஜானாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தாரா? அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் காவலர்கள்.
சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவலர்கள் உடற்கூராய்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்கிறார்கள். திருமண மண்டபத்தில், விஷச் செடிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.