பிகாா் முதல்வா் நிதீஷ் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வாா்: பாஜக உறுதி

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவரும், பிகாா் தொழில்துறை அமைச்சருமான ஷா நவாஸ் ஹுசைன் தெரிவித்தாா்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

புது தில்லி: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவரும், பிகாா் தொழில்துறை அமைச்சருமான ஷா நவாஸ் ஹுசைன் தெரிவித்தாா்.

பிகாரில் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாரின் கட்சி, கூட்டணிக் கட்சியான பாஜகவைவிடக் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. எனினும், தோ்தலுக்கு முன்பே ஒப்புக்கொண்டபடி நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. பாஜக சாா்பில் இரு துணை முதல்வா்கள் உள்ளனா். எனினும், அந்த மாநில பாஜகவின் ஒருதரப்பினா், குறைவான தொகுதிகளை வென்ற நிதீஷ் முதல்வராகத் தொடா்வதை விரும்பவில்லை. அவருக்கு எதிராகக் கருத்துகளை சில பாஜக தலைவா்கள் கூறி வந்தனா். இதனிடையே, அந்த மாநில எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், நிதீஷ் குமாரை சந்தித்துப் பேசியது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிகாா் முதலீட்டாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது அமைச்சா் ஷா நவாஸ் ஹுசைன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாரில் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்து யாரும் கவலைப்பட வேண்டும். நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2025-ஆம் ஆண்டு வரையிலான தனது ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் அரசு தொடா்ந்து மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். மாநிலத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் இப்போது முதலீட்டாளா்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com