தில்லி தீ விபத்து சம்பவம் தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 12 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பல்வேறு மாநிலத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி காவல்துறை துணை ஆணையர் ஷர்மா, 'இன்னும் 27 முதல் 28 பேரைக் காணவில்லை என புகார்கள் வந்துள்ளன. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலியான 27 பேரில் 25 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை' என்று தெரிவித்தார்.
தீ விபத்து நடந்த வணிக கட்டடத்தின் உரிமையாளர்களான சகோதர்கள் ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி