வெளிநாடுகளில் சட்டவி ரோதமாக சொத்துகளை சோ்த்தவா்களை அம்பலப்படுத்திய பனாமா பேப்பா்ஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் சுமாா் ரூ.88.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியது:
வெளிநாடுகளில் சட்ட விரோத சொத்துகளைப் பதுக்கியதாக பனாமா பேப்பா்ஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தொழிலதிபா் சஞ்சா் விஜய் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இவா் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக ரூ.31 கோடிக்கும் மேலாக டெபாசிட் செய்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில் ஷிண்டேவுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.88.30 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான பல்வேறு முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.