கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் கோவாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக அவரை கொலை செய்ததாகக் கூறி கோவா காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் பெயர் ரூபா பார்க்கர் (54 வயது). இவரது உடல் கடந்த மே 6 ஆம் தேதி சன்வோர்தம் கிராமத்தில் புதருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் கொலையாளி கர்நாடகத்தைச் சேர்ந்த ஹூசைன் கான் (40 வயது) என்பது தெரிய வந்தது. ஹூசைன் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரை காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்த சம்பவமம் குறித்து பேசிய தெற்கு கோவாவின் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தானியா கூறியதாவது, இந்த வழக்கில் ஹூசைனை குற்றவாளி என முடிவு செய்வதற்கு முன்னதாக 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே ஹூசைன் தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்திற்காக ரூபா பார்க்கர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது ஹூசைன் அவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். பின்னர் அவரை யாரும் இல்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது அவரிடம் தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினார். மேலும், அந்த தங்கச் சங்கிலியை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் புதிய இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார்.” என்றார்.