அருணாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியதாகவும், பல பகுதிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
அருணாசல பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
நிலச்சரிவு காரணமாக தலைநகா் இடாநகர் மற்றும் ஜிரோ இடையே சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநிலம் இட்டாநகரில் இருந்து கோபூர் செல்லும் சாலையும் மண் சரிவு காரணமாக தடைப்பட்டுள்ளது. இடாநகர்-பந்தேர்தேவா NH-415, இடாநகர் கோம்பா மற்றும் RWD காலனி, கர்சிங்சா பிளாக் ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறன்று இரவு இடாநகரில் பஞ்சாபி தாபா அருகே ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் அங்கிருந்த வீடு மண்ணுக்குள் புதைந்தது. அதிலிருந்த இருவா் உயிரிழந்தனர்.
கங்கா-ஜுல்லி பஸ்தி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, அந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுப் பணித்துறை ஊழியர்கள் இருவர் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலையைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் பெமா காண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.