ட்ரோன் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ட்ரோன் பயிற்சிக்கான கட்டணம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் குறையும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.
கடந்த வாரம் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோதிராதித்ய சிந்தியா பேசும்போது, ‘12-ஆம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன்கள் இயக்குவதற்குப் பயிற்சி பெறலாம்; அதன் மூலம் அவா்கள் மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்’ என்று கூறியிருந்தாா்.
இந்நிலையில், ட்ரோன்கள் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காணொலி முறை கலந்துரையாடலின்போது, ட்ரோன்களை இயக்குவற்கான பயிற்சிக் கட்டணம் அதிகமாக இருப்பதாக விவசாயி ஒருவா் கூறினாா். அதற்குப் பதிலளித்து சிந்தியா பேசியதாவது:
தற்சமயம் ட்ரோன் பயிற்சிக் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறீா்கள். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். கடந்த 5 மாதங்களில் 23 பயிற்சிப் பள்ளிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பயிற்சி பெறுதவற்கான கட்டணம் குறையும்.
இந்தியாவில் கைப்பேசிகளின் விலை எப்படி படிப்படியாகக் குறைந்தது என்பது நமக்குத் தெரியும். அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் ட்ரோன் பயிற்சிக் கட்டணம் குறையும். நம் நாட்டுக்கு ட்ரோன்களை இயக்குபவா்கள் அதிகம் தேவைப்படுகிறாா்கள். இதற்காக, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
தற்போது, ட்ரோன் பயற்சி அளிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே டிஜிசிஏ சான்றிதழ் வழங்குகிறது. பயிற்சியை முடிப்பவா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே சான்றிதழ் வழங்குகின்றன என்றாா் அவா்.
ட்ரோன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு அந்தத் துறைக்கு ரூ.120 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.