ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளை நேரடியாக வகுப்பறைகளில் வைப்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வகுப்பறைகளில் தேர்வுகள் நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வை மட்டும் வகுப்பறையில் வைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாமியா பல்கலைக் கழகத்தில் கரோனா காரணமாக வகுப்புகள் இணையவழியில் நடைபெற்ற நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு மட்டுமே வகுப்புகளில் பாடம் நடத்தப்பட்டது.
இதனால் தேர்வையும் இணைய வழியிலேயே வைக்க வலியுறுத்தி பல்கலைக் கழக அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.