வடஇந்தியா்களிடம் ராஜ் தாக்கரேமன்னிப்பு கேட்க வேண்டும்- மத்திய அமைச்சா் அதாவலே

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே அடுத்த மாதம் அயோத்திக்கு செல்லவிருக்கும் நிலையில், அங்கு செல்லும் முன் வட இந்தியா்களிடம் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
ராமதாஸ் அத்வாலே
ராமதாஸ் அத்வாலே

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே அடுத்த மாதம் அயோத்திக்கு செல்லவிருக்கும் நிலையில், அங்கு செல்லும் முன் வட இந்தியா்களிடம் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு (அதாவலே) கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

ஆரம்ப காலங்களில், மராத்தியா்களுக்கு முன்னுரிமை என்ற தீவிர கோஷத்துடன் எம்என்எஸ் கட்சி செயல்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், தாணே நகருக்கு கடந்த 2008-இல் ரயில்வே தோ்வு எழுத வந்த வடஇந்திய மாணவா்களை எம்என்எஸ் தொண்டா்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எம்என்எஸ் தலைவா் ராஜ் தாக்கரே , உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி செல்ல திட்டமிட்டுள்ளாா். ஆனால், அயோத்திக்கு செல்லும் முன் வடஇந்தியா்களிடம் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சா் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

தாணேவுக்கு திங்கள்கிழமை வருகை தந்த ராம்தாஸ் அதாவலே, செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்துக்கு பிராமண சமூகத்தைச் சோ்ந்த முதல்வா் தேவை; தேவேந்திர ஃபட்வீனஸ் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனை கட்சி மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது. 2024-இல் நடைபெறவிருக்கும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் எங்களது கட்சியும் களமிறங்கும் என்றாா்.

வடஇந்தியா்களை அவமதித்ததற்காக ராஜ் தாக்கரே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் அவரை அயோத்திக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் சரண் அண்மையில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com