ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா பாராவை கொலை செய்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பீட்டர் முகர்ஜிக்கும், அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை, ஷீனா போரா காதலித்ததால், இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
கைதிற்குப் பின் மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அவர் பிணை மனுவை எதிர்த்து சிபிஐ “இந்திராணி முகர்ஜி தன் மகளைக் கொன்றவர், மகனைக் கொல்ல முயற்சி செய்தவர். இதை சாதாரண வழக்காகக் கருத முடியாது என்பதால் நீதிமன்றத்தின் எந்தக் கருணையையும் பெறத் தகுதியற்றவர். மேலும் , இந்திராணி வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து தலைமறைவாகக் கூடும்’ என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் “இந்திராணி முகர்ஜி சிறையில் 6.5 ஆண்டுகளைக் கழித்துள்ளார். அதனால், அவருக்கு பிணை வழங்கப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.