இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மதிப்பாய்வு செய்யவுள்ளது.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 191.79 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, கரோனா தொற்றின் எண்ணிக்கை பற்றியும் கரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் நாளை (வெள்ளிக்கிழமை) மதிப்பாய்வு செய்யவுள்ளார்.
12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 3.22 கோடி கரோனா தடுப்பூசிகள் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 59 வயது நிரம்பியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தொடங்கின.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பதிவான கரோனா தொற்றுகள் சற்று அதிகரித்து 2,364 ஆக உள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா சிகிச்சையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை 15,419 ஆக உள்ளது. தினசரி பதிவாகும் கரோனா தொற்றுகளின் விகிதம் 0.50 சதவிகிதமாக பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் கரோனா தொற்றிலிருந்து 2,582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல நாடு முழுவதும் ஒரு நாளில் கரோனாவால் 10 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,24,303 ஆக அதிகரித்துள்ளது.