ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அதை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "இந்தியா கூட்டாட்சி முறையில் இயங்குவதால், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டம் இயற்றுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே தீர்வை அடைய ஜிஎஸ்டி கவுன்சில் இணைக்கமான முறையில் செயல்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் ஆலோசனைகளின் விளைவுதான் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற உச்ச நீதிமன்றம், கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்று மட்டும் கூடுதல் பங்கை வகிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும் தெரிவித்தது.