கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதுதொடர்பாக மேலும் வெளியிட்ட அறிக்கையில்,
வியாழனன்று திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளியும், தென் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாள்களுக்கு மாநிலத்தில் மிகக் கனமழை முதல் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்னைகளை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருக்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பல உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
மழை குறையும் வரை மக்கள் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு செல்லாமல் கவனமாக இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், மழை குறையும் வரை இரவுப் பயணத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு ஐந்து நாள்களுக்கு முன்னதாக மே 27ஆம் தேதிக்குள் தொடங்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.