எரிவாயுவில் இயக்கப்படும் (சிஎன்ஜி) 700 பேருந்துகளை வாங்குவதற்கு கேரள அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆண்டனி ராஜு கூறியதாவது: நலிவடைந்து வரும் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு (கேஎஸ்ஆா்டிசி) உதவிடும் விதமாக சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் 700 பேருந்துகளை வாங்குவதற்கு முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தப் பேருந்துகளை வாங்க ரூ.455 கோடி செலவிடப்படவுள்ளது. இதற்காக, கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியத்திடமிருந்து (கேஐஐஎஃப்பி) 4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறப்படும்.
கேஎஸ்ஆா்டிசியை இழப்பை குறைப்பதன் மூலமாக கடன் சுமையிலிருந்து மீட்டு வருவாயை அதிகரிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே, சிஎன்ஜியில் இயக்கப்படும் புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன என்றாா் அவா்.