பெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் மீது போலி என்கவுன்ட்டர்: விசாரணை ஆணையம்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஹைதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் கால்நடை மருத்துவரை பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்திய நான்கு போ், அவரை கொலை செய்து அவரின் உடலை எரித்தனா். அவா்கள் நால்வரையும் கைது செய்த காவல்துறையினா்,  அனைவரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிா்புா்கா் தலைமையில் 3 போ் விசாரணை ஆணையத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அமைத்து, 6 மாதத்தில் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, விசாரணை ஆணையத்துக்கு மூன்று முறை கால அவகாச நீட்டிப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அதன் பின், விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில், தற்போது ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com