கடந்த ஆறு மாதங்களாக, கடும் உடல்நல பிரச்னையால் அவதிக்குள்ளாகி வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 56 வயது நபர் தற்போது சற்று நிம்மதியாக உள்ளார். ஒரு மணி அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரின் வயற்றிலிருந்து 206 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அவேர் க்ளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் நல்கொண்டாவை சேர்ந்த ராமலக்ஷ்மையா என்பவருக்கு லேப்ரோஸ்கோபி மேற்கொண்டு சிறுநீரக கற்களை அகற்றியுள்ளனர். முன்னதாக, உள்ளூர் மருத்துவர் சிகிச்சை அளித்தும் அது அவருக்கு உடல்நல பிரச்னையிலிருந்து தற்காலிக தீர்வே அளித்துள்ளது.
இருப்பினும், வயிற்று வலி அவரின் தினசரி வாழ்வில் தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்திவந்துள்ளது. திறம்பட செயல்பட முடியாமல் தவித்துவந்துள்ளார். இதுகுறித்து மூத்த சிறுநீரக மருத்துவர் பூலா நவீன் குமார் கூறுகையில், "வயிற்றின் இடது பக்கத்தில் சிறுநீரக கற்கள் இருப்பது முதற்கட்ட சோதனையிலும் அல்ட்ரா சோனோகிராபியிலும் தெரிய வந்தது. சிடி ஸ்கேனில் அது உறுதி செய்யப்பட்டது.
நோயாளிக்கு ஆலோசனை வழங்கப்பட்டு லேப்ரோஸ்கோபிக்கு தயார் செய்யப்பட்டார். கடைசி ஒரு மணி நேரத்தில் அனைத்து கற்களும் அகற்றப்பட்டன" என்றார். மருத்துவர் வேணு மன்னே, சிறுநீரக ஆலோசகர் மோகன், மயக்க மருந்து நிபுணர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் மருத்துவர் நவீன் குமார் இந்த அறிவை சிகிச்சையை மேற்கொண்டார்.
ராமலக்ஷ்மையாவின் உடல்நிலை குறித்து விவரித்துள்ள மருத்துவர் நவீன், "சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டு குணமடைந்துவிட்டார். இரண்டாம் நாள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்றார்.
அதிக வெப்பநிலை காரணமாக மக்களிடையே நீரிழப்பு ஏற்படுவதாகவும் இதன் விளைவாக வயிற்றில் சிறுநீரக கற்கள் தோன்றுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தவிர்க்க, அதிக தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.