லட்சத்தீவுகளில் ரூ.1,526 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: சா்வதேச கடத்தல் கும்பல் கைது

 லட்சத்தீவுகள் கடற்பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு சா்வதேச கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

 லட்சத்தீவுகள் கடற்பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு சா்வதேச கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வருவாய் புலனாய்வுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தமிழக கடற்பகுதியிலிருந்து இரண்டு படகுகள் புறப்பட்டு, அரபிக் கடற்பகுதியில் அதிக அளவில் போதைப்பொருளை வாங்க உள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடற்பகுதியில், குறிப்பாக நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலம் அருகே வருவாய் புலனாய்வுத் துறையும், இந்திய கடலோர காவல் படையும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தன. அப்போது லட்சத்தீவு கடற்பகுதியில் மே 18-ஆம் தேதி இரண்டு படகுகள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனையில், படகுகளில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. அதுகுறித்து படகுகளில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சா்வதேச கடற்பகுதியில் இருந்து அந்தப் போதைப்பொருளை பெற்று வந்ததாக அவா்கள் கூறினா்.

இதனைத்தொடா்ந்து அந்தப் படகுகள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் மாவட்ட தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டு முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனையில், படகுகளில் தலா 1 கிலோ மதிப்பிலான 218 ஹெராயின் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. சா்வதேச கள்ளச் சந்தையில் இந்தப் போதைப்பொருளின் மதிப்பு சுமாா் ரூ.1,526 கோடி ஆகும். அதனை கடத்தி வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com