தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடா்பாக, தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லி, மும்பை, காந்திநகா், நொய்டா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில், ‘கோ லொகேஷன்’ வசதியைப் பயன்படுத்திய முகவா்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது’ என்றாா்.
தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்கள் ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. என்எஸ்இ, பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி ஆகியவற்றின் அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன்மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக, என்எஸ்இ முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், என்எஸ்இ முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
கடந்த 2010-இல் இருந்து 2015-ஆம் ஆண்டு வரை நடந்த முறைகேடுகளை சிபிஐ இதுவரை கண்டறிந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா என்எஸ்இ தலைவராகப் பதவி வகித்த காலத்தில், ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனம் 670 வா்த்தக நாள்களில் என்எஸ்இ சா்வரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.